Tuesday, August 14, 2018

குறி சொல்லுதல்

குறி சொல்லுதல்
குறி சொல்லுதல் என்பது எவ்வகை சார்ந்தது.. எந்த முறையில் குறி சொல்லப்படுகின்றது, அதன் சாரம் என்ன? எவ்வகையில் வேருடன் இணைக்கப்படுகிறது.. பிரபஞ்சத்தின் வெளியும் அதன் ஊடமர்ந்த வேர்களும் மனிதனின் உயிரும் எங்கு இணைத்துக் கொண்டன.. வேர்கள் மறைக்கப்பட்டு விட்டன. மறைக்கபடாமலிருந்தால் வேர்களும் கிளைகளும் வேறு வேறு அல்லவே.

உலகியல் தன்னுடைய கற்பிதங்களால் தொடர்ந்து சென்ற வண்ணம் இருக்கும் போது நம் அறிவுக்கு ஏற்றார் போல அதை பகுபடுத்தி செல்ல மனம் இரு பக்கமும் சுழன்று கொண்டும், தட்டு தடுமாறி கொண்டும் தான் இருக்கிறது. களைப்பை பொருட்படுத்தாது தேடியது சரியாக எட்டும் வரை தாகம் தணியாது, பகுத்து, பிரித்து, சேமித்து அதன் ஊடே பயணிப்பது தான் முறைபடுதபட்ட வாழ்கை நெறி.

யோகம் வெறும் சுற்றி வரும் கூடிய தூரமல்ல என்பதும். மனம் களைத்து , பிறழ்ந்து, குறுக்கும் நெடுக்கும் மாய் திரிந்தும், பொதி கழுதை தன் மேல் ஏற்றிய பாரத்தை சுமப்பது போல கர்மா எனப்படும் ஒரு விதமான பரவிய தொடர்பை சுமந்து, முக்கி முனகி  மேடேறுவதைப் போல ஏறிக் கொண்டிருக்கிறோம். அதுவே இயல்பாகி போன பின் அது தானே ஒடிக் கொண்டிருப்பதும், இப்புலனை கொண்டு அறிய ஏதுவாகிறது.

நான் பள்ளி சிறுவனாக இருந்த போது என் தாத்தா சென்னை வந்திருந்தபோது ஒரு நாள்., பேச்சுவாக்கில் அவர் சொல்லியது" ஒரு உருவம் தண்ணீர் வரும் குழாய் மீதேறி இரண்டாம் மாடிக்கு செல்கிறது என்றார். அது திருடனாயிருக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள்.... அந்த வீட்டில் கீழே ஆறு வீடும் மேலே ஆறு வீடென்று பன்னிரெண்டு வீடுகள் மொத்தமிருந்தன. மச்சியில் ஒரு நீர் டேங்க்கும் அதை மோட்டாருடன் பொருத்தப்பட்டிருந்தது. நீர் செல்லும் அந்த இரும்பு பைப் மிக சிறியது.. பளுவைதாங்ககூடிய அளவில் இல்லை. ஒரு ஆள் ஏற லாயக்கற்றது. ஏறினால் உடைந்து விடும். பின்னொரு சாய்ந்திரத்தில் நாங்கள் விளையாடி கொண்டிருக்கும் போது ஒரு கரிய உருவம் குழாய் மேல் ஏறி செல்வதை கண்டேன். மனிதனல்ல அவ்வுருவம். நான் திகைத்தேன்..

சிலரிடம் சொல்லும் போது.. போடா, அது பேயா இருக்கும்...என்றார்கள். என்னால் அதை அடையாளம் காண முடிந்தது, கூப்பிட்டால் நம்மை ஏதும் செய்து விட்டால். மற்றுமொரு முறை வெள்ளை சேலை உடுத்திய பெண் ஒன்று மச்சிக்கு செல்லும் படிக்கட்டில் அமர்ந்திருப்பதை பார்த்தேன்.... அது மேலே போவதுமாய் கீழே வருவதுமாய் இருந்தது.. அடிக்கடி கண்ணில் தென்பட்டது.. அது என்னை நோக்கி திரும்பியது. முகம் ஞாபகத்தில் இல்லை.. மூளை செயலற்று விட்டால் அந்நிகழ்ச்சியை உயிரோட்டமாக பதிவிட இயலவில்லை. தெய்வமா, பேயா, காட்டு தெய்வங்களா என்று பல முறை சிந்தித்ததுண்டு. பக்கத்தில் சோலையம்மன் கோவில் இருப்பதால் எவரும் வசப்படுத்தி வைத்திருப்பார்கள் என்று பிற்காலத்தில் அறிவு தெளிந்ததும் புரிந்து கொள்ள முடிந்தது.

கண்ணுக்கு தெரியாத வடிவில் இவைகள் அலைகின்றன..... நீர் தொட்டிக்கடியில் கீழே வாசம் செய்வது. உருமாறி கொள்வது என்று திரிந்து கொண்டிருக்கலாம் காற்றில் அதன் ஓசையை கேட்கலாம்.. பக்கத்தில் வைத்திருக்கும் பொருளை தள்ளிவிடும்... காற்று தள்ளியதா? அல்லது நாம் கவனிக்க அது செயல் செய்கின்றதா? பேய்களுக்கும் தெய்வங்களுக்கும் வித்தியாசம் விரிவாக தென்படும்.. பழங்குடிகளில் தெய்வத்தை வசப்படுத்தி கையாள்கிறார்கள்... விலங்கு உரு கொண்ட தெய்வங்கள் வசப்படும் என்று கேட்டதுண்டு.... ஒரு பெரிய குருமாரின் சிஷயர்களில் ஒருவர் வாராகி எனப்படும் பன்றி தலை கொண்ட தெய்வத்தை வழிப்பட்டு அது உருவெடுத்து நின்றது எப்படி என்பதை விவரித்தார், பனி படர்ந்த நீர்குமிழ் போல் பரவி நின்றதை கண்டதாக சொன்னார்... அதை வசப்படுத்தும் மந்திரத்தை ஒரு சிறிய காகிதத்தில் எழுதி கொடுத்தார்.. அதைப் போல பலர் எழுதி கொடுத்தனர்.... ஒரு தெய்வத்தை எப்படி பல மந்திரமாக வழிப்பட்டனர் என்று கேள்வி பல முறை மனதில் எழுந்தது..? பூசை செய்து வசப்படுத்தி காட்டு தெய்வங்களை சில குறிப்பிட்ட சமூக அமைப்பினர் தங்கள் வசம் பரம்பரையாக வைத்திருந்ததுண்டு..மாந்திரீகத்திற்கு கையாள்வார்கள்....

கடையநல்லூர் கிழக்கே ஐந்து கிலோ மீட்டர் பிறகுள்ள எங்கள் ஊரில் உள்ள ஒரு மாட தெய்வத்தை என் அம்மா வழி சந்ததியினர் கோயிலமைத்து வழிப்பட்டு வந்துள்ளனர்.. அதில் ஒரு வயசாளியை நான் பார்த்து பேசியிருக்கிறேன். ஊருக்கு செல்லுகையில் அங்கே விளக்கேற்ற எண்ணெய்க்கு பணம் கொடுப்பதை பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட மாதத்தில் நடைபெறும் பூசையில் அதை பாதுகாத்து வரும் பெரியவர் அமர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பாரம். அம்பாசமுத்திரத் திலிருந்து குதிரை  கிளம்பி விட்டது, பறந்து வருகிறது, தென்காசி கடந்தது என்று தெற்கிலிருந்து கடந்து வரும் ஊர்களின் பெயர்களை சொல்லிய வண்ணமே இருப்பாராம்.... வந்தாச்சு என்றவுடன் குதிரை குளம்பொலி சத்தம் கேட்குமாம்.. பூசை நடக்கும். தெய்வம் குதிரை மீதிருந்து விட்டிறங்கி கோயில் உள்ளே புகுந்து வெளியே வருமாம்.. அச்சமயத்தில் குதிரை சாணமிடும்பின்னர் அத்தெய்வம் கிளம்பி விடும்... பூசாரி அமைதியடைவார் குதிரை சாணத்தை திருநீர் செய்து வருடம் முழுக்க கொடுப்பார்கள்...

கோவிலுக்குள் ஒன்றும் இருக்காது விளக்கொன்று எறிந்து கொண்டேயிருக்கும்சிறிய வெண்கல குவளை, சம்பாகைதடி, பிரம்பு. அகம் அங்கே இல்லாததால் தெய்வத்தை வழிபடுதல் சிரமம் ஏற்பட்டது. வாயிலின் படியில் பூசாரி தாத்தா அமர்ந்திருப்பது போலவே கண்டது. அதை உணரும் கணத்தில் நாம் அந்த கரிய பேருருக் கொண்ட தெய்வத்தை பார்க்கலாம். மீண்டும் வெண்மை குதிரை மீதேறி அத்தெய்வம் பறந்து சென்றது.

அவர் சந்ததியினர்க்கு அத்தெய்வ வழிபாட்டை கொடுக்க அக்கிழவர் முயன்ற போது, மாமா வழியில் உள்ளவர் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாரம். அதனால் அதை அவரிடம் கொடுக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள். அந்த கிழவரின் புகைப்படம் ஒன்று என் அப்பா எடுத்தது நீண்டகாலம் இருந்தது. பின்னர் கிராமத்து மக்கள் வீட்டுக்கு வரும் நேரங்களில் அந்த ஆல்பத்தில் இருந்து கிழத்தெடுத்து கொண்டனர்.

சில சமயங்களில் ஒருக்களித்து பார்க்கும் போது கரிய தெய்வங்கள் தென்படும். நம்மை திகைக்கவைத்துவிடும் நேருக்கு நேராக மெல்லிய ஒளியில் பரந்து விரிந்த மன வெளி மூலம் காணும் அப்பேருருவம் நம்மை சிலிர்க்க வைத்து பயம் பொருத்தி விடும்.

பல ஆண்டுகளாக தென்காசி கிழக்கு பகுதியில் தெய்வங்கள் அமர்ந்து வாக்கு சொன்னதாக பேச்சுவலக்கில் அமைந்திருத்தலை காணலாம். கடலோரமும், வரண்ட நிலபகுதியிலெல்லாம் மாந்திரீகமும் , தெய்வ வசிய சங்கல்பங்கள் ஏற்படுத்தி உருகொண்டு செல்வது வழக்கில் இருந்தது. பழங்குடிகளின் மாட தெய்வங்கள் குடியிருந்தன. கால தேவதையான யட்சினியை நிறுவி ஆலயங்கள் பல செய்திருந்தனர்.

கூப்பிட்டால் ஓடி வரும் அம்மன்களாக அண்மையில் நாம் கண்டடைந்தவைகளே. வாரம் ஒரு முறை சோலையம்மனை பார்க்க வில்லையென்றால், அது வீடு தேடி வந்து விடும், நான் போய் ஒரு கும்பிடு போட்டு வருகிறேன், என்று என் அம்மா சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

ஊரெங்கும் கருங்கல் சிலைகளாக, இருக்க காரணம் மாட தெய்வங்களே... பூசையெல்லாம் வருடம் ஒரு முறை தான். படையல், பலி  என்றிருக்கும். மாட தெய்வம் ஒன்று. ஒருவர் உடம்பில் ஏறி... எனக்கு குளிருது, தனியாக இருக்கிறேன் என்று சொன்னதை பார்த்திருக்கிறேன். ஜோசியம் பார்த்திருக்கிறேன். குறி சொல்பவர்களை கேட்டிருக்கிறேன். தெய்வங்கள் கோவில் கொடையில் ஆடு சேவல் பலியிட்டு, சுடுகாட்டிற்கு வேட்டைக்கு சென்று திரும்பி குறி சொல்லும்.

இத்தனை குறி கேட்பவர் வரும் என்று தெய்வம் முன்னமே சொல்லி விடும்... அதற்கு தகுந்ததாற் போல் பழம், வெத்தலை எடுத்து தயாராகவைப்பார்கள்.. 50 என்றால் 50 பேருக்கு. ஒரு மனிதர் தெய்வ குணங்களை முழுமையாக அடையவும் குறி சொல்லவும், பின்னர் விலகவும் என்று மாறி மாறி பிரசனம் செய்வது எனக்கு புதிது.. இங்கே அவர் எல்லையை வரையறுக்கவில்லை.  களம் என்ன என்பதை சோளி உருட்டி தெய்வம் சொன்ன வண்ணமே இருக்கும். உலா போய் வரும் தெய்வம், அதன் போய் வரும் காலம்,அதன் இடைவெளி என்பது மிகச் சொற்பமான நிமிடங்களே. போகும் இடத்தில் தெய்வமோ, தேவதையோ, எச்சினியோ எதுவாக இருந்தாலும் கண்டும், கேட்டும் வந்து அதன் உருவகங்களை விளக்கி சொல்லி வரும்..

அம்மன் உடைய தேவ கணங்கள். உருமாறி செல்வதும் அதை கிரகிக்கபடுவதும் நடக்கிறது. அதன் காலம் நேரம் குறைவு. அடையாளங்கள், குறியீடுகள் எந்த சுவடுமில்லாமல் இங்கே இருக்கிறது. மிக ஆழ்ந்த படிமங்களால் ஆனது.. எல்லாவற்றுக்கும் தொடர்பு இருந்தது. தெய்வத்தை தேவதையை கிரகிக்க நாம் நம் மனத்தை உள் கொள்ள பழக கற்று கொள்ள வேண்டும்.சொல்லி கொண்டே வந்தது தெய்வம், நான் மறுக்க அங்கே ஒன்றுமில்லை, நான் வெறுமையானேன்,

கேள்வி கேள் என்றது, கேட்க அங்கே நான் விழிப்பு நிலையில் இல்லை. பல வருடம் அப்பியாசம் செய்து பழக்கப்பட்ட இந்த உடலும் மனமும் தெய்வங்கள் முன் கேள்வியின்றி தான் இருந்தனபோய் வாஒன்றுமில்லை நான் பார்த்து கொள்கிறேன் என்றது சாமி.

மிக நுட்பமான, பின்னி பிணைந்த இந்த தெய்வங்களின் தோன்றல்களும், மறைதல்களும் மனிதபிறவியை கடந்து செய்ல் பட்டுதான் கொண்டிருக்கிறது. எழுதும் நான் இதை அறியவில்லை என்றால், நான் மிக தூரத்தில் பயணம் செய்து கொண்டு நிகழ் கால பயணத்தில் உள்ளவர்களும் அதில் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட மனகுவியல்களே காரணமாக கூட இருக்கலாம்.




1 comment:

Vethathiri Maharishi - Anuradha Selvakumar said...

வாழ்க வளமுடன்🙂🙏