நீல நிறம்
காலத்திலும் அதன் வெளியிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் எல்லா செயல்களும் கால வரையறைக்குள், அடங்கும் அல்லது அடங்குவதில்லை என்பதை புரிந்து கொள்வதாலேயே தலையிடுவதில்லை..
அவனைப் பார்க்க அவன் வீட்டிற்கு வருகிறவர்கள் முதலில் காண்பது சுவற்றில் நீல நிறத்தில் பூசப்பட்ட வானமும் கோள்கள் நட்சத்திரங்கள் நீல நிறத்தில் பூசி இருப்பதை காணலாம்... அதை வைத்து அவன் உங்களுக்குப் போக்கு காட்டிப் பேசி கொண்டிருப்பான் ... நீங்கள் கண நேரம் மனத்தோடு இருந்தால் உங்களை அவனால் படிக்க முடியாது... அதனால் வருகின்றவர்களை வேறு திசை காட்டி திருப்பி அவர்களைப் படித்து அறிந்துக் கொள்வான்... காலத்தால் அது பயனில்லை என்று பிரயோகிப்பதை கைவிட்டு விட்டான்.... பார்க்க வந்தவர் அவனை ஜோதிடரா நீங்கள்? என்று கேட்டார்... அவன் அதை மறுத்தான்... தனக்கு சோதிடம் தெரியாது என்றான் .... படிக்காமல் எப்படி நீங்கள் கிரகங்களையும் கோள்களையும் கணித்து சொல்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார் .... சிரித்தான்...நிறைய கேள்விகளுக்கு இப்படி தான் சிரித்து வைப்பான் ... அவனுக்கு அதைப் பற்றி உண்மையாகவே தெரியாது... புகழ் பெற்ற சோதிடர் ஒருவர் அவனுக்கு கற்று கொடுக்கிறேன் என்று சொல்லி .. சொல்லாமல் தவிர்த்து விட்டார் ...பல்லி சத்தம் வெளியே இருந்து வருவதை கூர்ந்து கேட்பான்... மிக தூரத்தில் ஒலித்தால் கூட அதை அவனால் கேட்க முடியும்... குழந்தைகள் அழுவதை உடனே தெரிந்து விடும் அவனுக்கு ... அவன் இருக்கும் குடியிருப்பில் பெண் குழந்தைகளாகவே பிறந்தது ... எதற்கு என்று ஒரு நாள் யோசித்தான் யூகிக்கவில்லை ... பயற்சி செய்தால் கை கூடும் என்று அதை விட்டு விட்டான்... அகங்காரம் பிடித்தவன் போல் தன் செயல்களில் காட்டினான்....ஐந்து இளையராஜா பாட்டுகளை ஒரு சேர பாட வைத்து ஒரே நேரத்தில் கேட்கும் பழக்க முடையவன் ... பார்த்து சொல்வீர்களா? என்று கேட்டார்... அவன் சரி என்றான் ...
ஒரு முறை தான் அதை திறந்து காண்பிப்பேன் .. அதில் நீங்கள் எல்லாவற்றையும் கேட்டு கொள்ள வேண்டும் ... மீண்டும் உங்களுக்கு அது திறக்காது என்று மெல்லிய ஓசையில் அவரிடம் சொன்னான் ... அவர்க்கு இவன் என்ன சொல்லவருகிறான் என்று புரியவில்லை.... புத்தகத்தை காட்டி நீங்களே படித்து கொள்ளுங்கள் என்று படிக்க சொல்வார்களே... அதைப் போலவா? வருகிறவர்களை குழப்பி அனுப்புவான் என்று பலர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறார் .... பணத்தை துச்சமாக மதிப்பவனான இவன் ... அதனால் ஒரு சேர திமிர் அகங்காரம் எல்லாம் அமைந்துள்ளது என்று மனத்திற்குள் திட்டினார் ... ஜாதகத்தை டீ பாயில் வைத்து விட்டு அமைதியாக இவன் பேசுவதை கேட்க ஆரம்பித்தார் ... சமுதாயத்தில் நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் ... தன்னை மதிக்காத இந்த ஆளிடம் வந்து இப்படி நிற்க வேண்டியதாகி விட்டதே என்று எண்ணினார்..
வீட்டில் இருந்த நீல வண்ணத்தில் வரைந்திருந்த நட்சத்திரம் கோள்களையுடைய அந்த சுவரை காண்பித்து .. இப்பொழுது உங்களுக்கு கால சக்கரம் மாதிரி இருக்குது இல்லையா ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சூசகமாக சிரித்துக் கொண்டே அவர் கண்களைப் பார்த்தான் .
அவனுடைய கரு விழியில் நட்சத்திர கோளங்கள் தீ பந்தங்கள் எரிவதை அவனின் இரு கண்களிலும் படம் ஓடுவதை போன்றிருப்பதை பார்த்தார் ...
என்னிடம் ஜாதகம் கேட்க வந்தீரா? என்றான் ... அவரால் தன் உடம்பை அசைக்க முடியாத நிலையில் பதில் சொல்ல முடியவில்லை... தானும் அந்த நீல சுவரும் ஒன்றுப் போல மாறுவதை கண்டு அதிர்ந்தார் ... தன் இதய துடிப்பு குறைந்து கொண்டே வந்து நின்று விட்டதை உணர்ந்தார் ...
தன் அக நெருப்பை கணலாக ஏற்றி எண்ணத்தை பருப் பொருளாக மாற்றி அதை தனி தனி உருவங்களாக உருவெடுக்க வைத்து அடுத்தவர் கண் முன் உதிக்க செய்வதில் நிபுணராக உள்ள குருவிடம் இருந்து வந்தவனிடம் ... ஜாதகம் சொல்ல சொல்லி சிக்கிக் கொண்டார்... குருவின் தீயை அவன் வெம்மை படுத்தி அந்த நீல நிற சுவற்றில் கண்ணுக்கு தெரியாத கருப் பொருளாக படைத்து வைத்திருக்கிறான் ... அந்த ஓவியம் படமாக வரைந்து பூசி பதினான்கு வருடம் முடிந்தது ... அண்ட சராசரத்தை தட்டையாக விரித்து நீல சுவற்றில் பரப்பி வைத்திருக்கிறான்... சில சமயங்களில் நட்சத்திரங்கள் அவன் வீட்டின் வரவேற்பறையில் புழுங்குவதை பார்த்து அதனூடே கை விரல்களைக் லென்ஸ் போன்று குவித்து ... அதில் தன் அப்பாவை தேடுவான்... விடியலில் சூரிய ஒளி வீட்டின் வரவேற்பறையில் விழும் போது அவன் நின்றிருந்த கணத்தில் மறைந்துப் போவான்... தற்கணம் வாய்க்கும் ...
நீங்கள் நீல நிற வண்ணத்தை கவனிக்கிறீர்களா என்று கேட்டான்... ? அவர் பேசாமல் அவனைப் பார்த்தார் ... அவரால் கண்களை கூட சிமிட்ட முடியவில்லை... சிரித்துக் கொண்டே உங்கள் வலப்புறம் இருக்கும் நீல நிற சுவரில் என்ன தெரிகிறது என்று மீண்டும் கேட்டான்... நேர்முக தேர்வு கேள்வி போல அதை திருப்பி திருப்பி கேட்பான்... அவர் நட்சத்திரங்களும் கோள்களும் உயிர்ப்பாக காண்கிறேன் ... என்றார் ... அது என்னருகே வருகிறது... எனக்கு மிக பயமாக தெரிகிறது என்றார் ... இப்பொழுது கண்ணை மூடி கொள்ளுங்கள் என்றான் அவன் .... கணத்தில் அவர்க்கு எல்லாம் மறைந்து விட்டது ... அவன் குரல் மட்டும் அங்கே ஒலித்தது ... அவர் இறந்து போன தன் தாய் தந்தையரை உயிரோடு பார்க்கிறார் ... அவர்களிடம் பேசுகிறார் ... ஓ வென்று கண்ணீர் விட்டு அழுகிறார்....
நேருக்கு நேராக தன் வாழ்க்கையில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார் ... இடது புறம் இருந்து கடந்த காலத்தில் ஆரம்பித்து பின்னர் நடுவில் வந்து நிகழ்காலத்தில் நின்று வலது புறம் திரும்பி எதிர்காலத்திற்கு சென்று அங்கே பார்க்க வேண்டிய காட்சிகளை நிகழ் காலத்தில் பார்த்து பரவசமடைகிறார் ... அவனை அந்த உலகில் தேடுகிறார் ... காணவில்லை.... கூப்பிடுகிறார் அவனை... நீங்கள் முடித்து வெளிய வாருங்கள் என்று அவன் குரல் கேட்கிறது ... அவர் கேட்க விரும்பிய ரகசியங்களை சம்பந்தப்பட்டவரை அழைத்தும் கேட்டும் பதில் பெறுகிறார் ... அவர்க்கு தன் இதயம் துடிக்கும் சத்தம் திரும்ப கேட்க ஆரம்பித்து விட்டது ... உடனே திரும்பி வாருங்கள் என்று அழைத்தான் ... அவர் வர மாட்டேன் என்று மறுக்கிறார் ... இன்னும் சிறிது நேரம் கொடு என்று மன்றாடுகிறார் ... வாழ்க்கை முழுக்க தொலைத்த உன் காலத்தைப் போன்று இங்கே உன் காலத்தை இருப்பு வைக்க முடியாது என்று கோபமாக பதிலளிக்கிறான் ...
பதற்றமோ பயமோ தேவையற்ற அச்சமின்றி கால சக்கரத்தை கை கொள்ள பல ஆண்டு காலம் முயற்சித்தான் .... மனம் குலைய வைக்கும் அளவில் தான் அது இருந்தது ... எதுவும் தன் அறிதலுக்கு அப்பாற்பட்டதல்ல என்ற கூற்று வெறும் பொய் என்பதை அறிந்தான்... உள்ளொளியால் மட்டுமே யதார்த்தை பார்க்க இயலும் என்று சொன்னான் ... யாரும் கேட்கவில்லை அவ்வொளி வர மற்றவற்றை நிற்க வைப்பது கடினமானது என்று காலசக்கரத்தில் ஏறி இறங்க போகும் போது புரிந்தது ...
அவர் கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருப்பதை பார்க்கிறான் ... அவன் எழுந்து அங்கேயும் இங்கேயும் அமைதியாக நடக்கிறான் ....மேற்கு பக்கம் மரகட்டை ஒன்று வைக்கப்பட்டுள்ளது ... அதை திரிசூலம் போல் கையில் ஏந்தி அவர் அமர்த்திருக்கும் சோபா வரை வந்து மீண்டும் நடந்து வரவேற்பரையில் அங்குமிங்கும் நடக்கிறான் ... அவன் கண்களுக்கு நீல நிற சுவர் மறைந்து அண்ட சராசரம் தெரிகிறது ... கால சக்கரத்தில் நேரம் பார்க்கிறான் .... ஐந்து நிமிடம் ஆயிற்று என்று இரண்டு கைகளையும் உயர்த்தி விரித்து போதும் என்று சொல்லி நடந்து கொண்டிருந்த கணத்தை நிறுத்தினான் .... . கைகளில் ஏந்தியிருந்த மரத்தால் செய்யப்பட்ட கம்பை கொண்டுப் போய் ஓரமாக வைக்கிறான் ... அவர் இதய துடிப்பு சீராகி கண்களை திறந்து பார்க்கிறார் ... அவன் நின்று கொண்டு யாரிடமோ போனில் கவனமாக பேசிக் கொண்டு இருப்பதை காண்கிறார் ... தனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தம் இல்லாததது போன்றும் நடந்தேறிய காட்சிகளில் அவன் தற்கணத்தில் இல்லை என்பது போல் நின்றிருந்தான்.. எழுந்து சென்று அவன் கால்களில் விழுகிறார் .... அவன் இதை ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை... அவர்க்கு குடிக்க தண்ணியும் , காப்பியும் கொடு என்று சொல்லிவிட்டு மீண்டும் போனில் பேசிக் கொண்டே சிரிக்கிறான் ....
ஆன்மா உணர்வதை தன் அனுபவத்தை தகவலாக மாற்றி அந்த நீல நிறமுடைய சுவரில் அடக்கி வைத்திருக்கிறான் ... மனம் அமைதியுடையோர் அந்த நீல நிறத்தை தாண்டி உள்ளே செல்வர்... தன்னைப் பார்க்க வருகிறவர்களுக்கு அதையே பரீட்சையாக வைத்திருக்கிறான் ... பூமியில் எழும் அடிப்படை ஒலிகளை பிரபஞ்சத்தோடு ஒற்றி பார்க்க முயல்கிறான் .... அவனுக்கு உடைகளே தேவையில்லை... உடையின்றி நிர்வாணமாக இருக்க முடிந்தால் அவன் இந்த உலகத்தின் மீது பற்றற்று போவான் அவனுக்கென்று ஒரு தோற்றம் உண்டு ... ஆழ்மனத்தில் எப்போதும் உண்டு. அது மட்டுமே அவன் கண்களுக்கு தெரியும்... அவன் எந்த தோற்றத்தையும் உருவாக்கி வெளிவர கூடியவன்.. தற்கணம் என்று சொல்லப்படும் கணத்தில் அவன் அங்கு இருப்பதேயில்லை... தனித்திருப்பதில் அவன் இருவராக இருக்கிறான் ...காலம் எப்பொழுதாவது தான் அவனுக்கு பணிந்து செயல்படும் ... கணத்தில் நிற்கும் போது அது பணியும் என்று ஒரு முறை கண்டான்... மீண்டும் அக்கணத்தை அவனால் கொண்டு வர முடியவில்லை என்று அதை விடாமல் துரத்தி பிடிக்க முயல்கிறான்...
திசைப் பார்த்து செலுத்துபவனாக இருக்கிறான்.... செல்ல வேண்டியவர்களை மனோசக்தியால் அந்த நீல சுவரில் பதித்து வழி நடத்துகிறான் ... அவர்கள் தான் செல்ல வேண்டும் என்று அவர்கள் அறியாமல் நிற்கிறார்கள் .. அதை மனப்பிறழ்வு நிலை .. தன் இயல்பை விட்டு ஒடுக்கி வைத்து கொண்டு சரியாக இருக்கிறோம் என்று பலர் சொல்வதை கேலி செய்கிறான்.